Tuesday, January 31, 2012

மைசூர் போண்டா

Posted: 31 Jan 2012 By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
பச்சை கொத்துமல்லி - சிறிது
தேங்காய் (சிறு துண்டுகள்) - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரித்தெடுப்பதற்கு

செய்முறை:

உளுத்தம் பருப்பை சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதை நன்றாகக் கழுவி, நீரை ஒட்ட வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு, உப்பு சேர்த்து மைய அரைக்கவும். அவ்வப்பொழுது சிறிது நீரைத் தெளித்து அரைத்தால் உளுந்து நன்றாக அரைப்பட்டு மென்மையாக இருக்கும். சிறிது மாவை எடுத்து நீரில் போட்டால், அது மிதக்கும். அதுதான் சரியான பதம்.

இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி, அரைத்த மாவில் சேர்க்கவும். அத்துடன் மிளகு, சீரகம், தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையைக் காய வைத்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான் சூட்டில் வைத்து, மாவை எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் போட்டு சிவக்க சுட்டெடுக்கவும்.

தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

No comments:

Post a Comment