Friday, July 27, 2012

கிரேக்க நாட்டு சூப்பர் உணவுகள் -முசாகா

Posted On July 27,2012,By Muthukumar
கிரேக்க நாட்டின் தேசிய உணவு, முசாகா. காய்கறி, ஆட்டிறைச்சியை அடுக்கடுக்காய் கொண்ட அற்புத சுவைகொண்ட உணவு இது. சுவையிலும், ஆரோக்கியத்திலும் இது பிரசித்திபெற்றது.
தேவையான பொருட்கள்:
பெரிய கத்தரிக்காய் - 1 கிலோ.
ஆட்டிறைச்சி - 1 கிலோ.
ஆலிவ் எண்ணெய் - 200 மி.லி.
பெ.வெங்காயம் - 150 கிராம்.
பூண்டு - 50 கிராம்.
சுக்கினி (இது ஒருவகை காய்கறி. வெள்ளரி போன்றிருக்கும்) - 600 கிராம்.
ரெட் ஒயின் - 200 மி.லி.
(விரும்பினால் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்)
பார்மேசான் பாலாடைக்கட்டி- 50 கிராம்.
கருவா பட்டை தூள் - 20 கிராம்.
ஸ்டாரநைஸ் தூள் - 10 கிராம்.
தக்காளி பேஸ்ட் - 100 கிராம்.
உப்பு - 30 கிராம்.
கருப்பு மிளகு - 15 கிராம்.
உருளைக்கிழங்கு - 700 கிராம்.
ஒரகோனா - 40 கிராம்
பார்ஸ்லி - 40 கிராம்.
புதினா - 40 கிராம்.
மொசரல்லா பாலாடைக்கட்டி- 200 கிராம்.
தக்காளி கூழ் - 350 கிராம்.
ஒயிட் சாஸ்- தேவையான அளவு.
முக்கிய குறிப்பு:
- பெரிய கத்தரிக்காயை வாங்கி, வட்ட மாக நறுக்குங்கள்.
- ஆட்டிறைச்சியை பச்சையாகவே மின்ஸ் செய்து, பிசிறு போல் ஆக்கி விடுங்கள்.
- வெங்காயம், பூண்டுவை சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
- தக்காளியை லேசாக வேகவைத்து, தோலை உரித்து, விதையை நீக்கிவிட்டு கூழாக்கிக் கொள்ளவேண்டும்.
- 100 கிராம் வெண்ணையை உருக்கி, அதில் 100 கிராம் மைதாவை கலந்து, பால் விட்டு கிளறி கெட்டியாகும் வரை லேசாக கொதிக்கவிடவும். உப்பும், மிளகும் கலந்து கொள்ள வும். இதுதான் ஒயிட் சாஸ்.
- உருளைகிழங்கை வட்டமாக நறுக்கி, உப்பு தண்ணீரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். சுக்கினியை வட்டமாக நறுக்கி, எண்ணெயில் பாதி அளவில் வேக வையுங்கள்.
செய்முறை:
மின்ஸ் செய்துவைத்திருக்கும் இறைச்சியை எண்ணெயில் வறுக்கவும். வறுக்கும்போதே ரெட் ஒயின் ஊற்றவும். பிரவுன் கலரில் வெந்துவரும்.
நறுக்கிய வெங்காயம், பூண்டு போன் றவைகளை ஆலிவ் ஆயிலில் வதக்கிவிட்டு, அதில் இறைச்சியை சேர்த்து ஐந்து நிமிடம் கிளறவும். ஒரகோனா, பார்சிலி, ஸ்டாரநைஸ் தூள், தக்காளி பேஸ்ட் போன்றவைகளை சேர்க்கவும். உப்பு, கார சுவையை சரிபார்த்து, கெட்டி யாகும் வரை கிளறி இறக்கி ஆறவைக்கவும். அதற்கு மேல் பார்மேசான் பாலாடைக்கட்டி துருவலை தூவவும்.
நறுக்கிவைக்கப்பட்டிருக்கும் கத்தரிக்காய், சுக்கினியை தோசைக்கல்லில் மாற்றி மாற்றிப்போட்டு வறுத்து எடுக்கவும்.
வாணலியில் வெண்ணை பூசி, தக்காளி கூழை முதல் அடுக்காக ஊற்றவும். அதற்கு மேல் கத்தரிக்காயை அடுக்கவும். அதற்கு மேல் இறைச்சியையும், அடுத்த அடுக்காக பாலாடைக்கட்டி, அதற்கு மேல் சுக்கினி, உருளைக் கிழங்கை அடுக்கவும். மீண்டும் இறைச்சியை வைத்து அதற்கு மேல் மீதம் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் அடுக் கடுக்காய் வைக்கவும். மேல் பகுதியில் ஒயிட் சாஸ் விடுங்கள். பின்பு மொசரல்லா பாலாடைக்கட்டியை வைத்து ஓவனில் வைக்கவும். அப்போது எல்லாம் உருகி, முசாகா செட் ஆகிவிடும். பின்பு என்ன சூட்டோடு சுவைக்கவேண்டியதுதான்.
மேற்கண்ட அளவில் தயாரித்தால் மொத்தம் 6 கிலோ இருக்கும். இதனை 7 பேர் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment