Posted On April 05,2012,BY Muthukumar
கோடைக்கால ஆரம்பத்தில் மாவடு நிறைய கிடைக்கும். மாவடுவை உப்பில் ஊற
வைத்து, மிளகாய் மற்றும் கடுகுத் தூளைச் சேர்த்து வைத்துக் கொண்டால் வருடம்
முழுவதும் உபயோகிக்கலாம். மற்ற ஊறுகாய்களைப்போல் இதற்கு எண்ணை அதிகம்
தேவையில்லை. ஆனாலும் வருடம் முழுவதும் கெடாமல் இருக்க உப்பை சற்று அதிகமாக
சேர்க்க வேண்டியிருக்கும். குறைந்த அளவில் செய்தால் உப்பு அதிகம் சேர்க்க
தேவையில்லை. அதனால் 1/4 கிலோ மாவடுவில் இதை செய்தேன். செய்முறையும்
பாரம்பரிய முறையிலிருந்து சற்று மாறு பட்டது. ஆனால் சுவையில் ஒன்றும்
மாறுபாடு தெரியவில்லை.
தேவையானப்பொருட்கள்:
மாவடு - 1/4 கிலோ
கல் உப்பு - 1/4 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் (குவித்து அளக்கவும்)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 2 டீஸ்பூன்
நல்லெண்ணை அல்லது விளக்கெண்ணை - 1 டீஸ்பூன்
செய்முறை:
மாவடுவை நன்றாகக் கழுவி, காம்பிலிருந்து பிரித்தெடுக்கவும். மாவடுவின் மேலே 1 அல்லது 2 cm அளவிற்கு காம்பை விட்டு விட்டு எடுக்கவும். சுத்தமான துணியால் மாவடுவைத் துடைத்து விட்டு, ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு அத்துடன் ஒரு டீஸ்பூன் எண்ணையைச் சேர்த்து, எல்லா மாவடுவின் மேலும் எண்ணைப் படும் படி கலந்து வைக்கவும்.
1/2 கப் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து, ஆற விடவும்.
மிக்ஸியில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பெருங்காய்த்தூள், கடுகு ஆகியவற்றைப் போட்டு நன்றாக அரைத்து தூளாக்கிக் கொள்ளவும்.
சுத்தமான ஒரு ஜாடியில் மாவடுவைப் போட்டு அத்துடன் அரைத்தெடுத்த தூள், ஆற வைத்துள்ள நீர் ஆகியவற்றைச் சேர்த்துக் குலுக்கி விடவும். மூடியைப் போட்டு மூடி, அப்படியே 3 நாட்கள் வைத்திருக்கவும். இடையில் தினமும் காலை ஒரு முறை, மாலை ஒரு முறை ஜாடியைக் குலுக்கி விடவும். 3 நாட்களில் மாவடு தோல் சுருங்கி ஊறியிருக்கும்.
அதன் பின் எடுத்து உபயோகிக்கலாம். தயிர் சாதத்துடன் சாப்பிட அதன் சுவையே அலாதிதான்.
No comments:
Post a Comment