Wednesday, January 7, 2015

சுரைக்காய் மோர் கூட்டு


Posted By Muthukumar,On Jan 7,2015
தேவையானப்பொருட்கள்:

சுரைக்காய் - 1
தயிர் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
வெந்தயம் - 5 அல்லது 6
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


செய்முறை:

சுரைக்காயின் தோலை சீவிவிட்டு, உள்ளிருக்கும் விதை மற்றும் வெள்ளைப்  பகுதியை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

தயிரை நன்றாகக் கடைந்து, அத்துடன் சிறிது நீரைச் சேர்த்து கெட்டி மோராக வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சுரைக்காய் துண்டுகளைப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, காய் மூழ்கும் அளவிற்கு சிறிது நீர் சேர்த்து வேக விடவும்.  காய் வெந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போட்டு கலந்து ஓரிரு வினாடிகள் கொதிக்க விடவும்.  பின்னர் அடுப்பை சிறு தீயில் வைத்து, மோரைச் சேர்த்துக் கிளறி விட்டு, உடனே அடுப்பை அணைத்து விடவும்.  நீண்ட நேரம் கொதிக்க விடக் கூடாது.

ஒரு வாணலியில் அல்லது தாளிக்கும் கரண்டியில் எண்ணை விட்டு, சூடானதும் கடுகு சேர்க்கவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காயம், காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து, சற்றுக் கிளறி விட்டு, இந்த தாளிப்பை கூட்டில் கொட்டிக் கிளறவும்.

இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.  அல்லது மற்ற சாத வகைகளுடன் தொட்டுக் கொள்ளவும் செய்யலாம்.

No comments:

Post a Comment